
பெயரில் என்ன இருக்கிறது?
ஷேக்ஸ்பியர் தொடங்கி நீலபத்மநாபன் வரை இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார்கள். ஆமாம்.. பெயரில் என்ன இருக்கிறது...?
யோசித்துப் பார்த்தால் ஒன்றுமில்லைதான். ஆனால் ஒரு பெயரை வைக்க, நமக்குத் தெரிந்தவர்கள் ‘என் பையனுக்கு/பொண்ணுக்கு ஒரு நல்ல பேர் சொல்லுங்க சார்’ எனும்போது அப்படி நினைக்க முடிகிறதா?
நியூமராலஜி கந்தாயங்களை விடுங்கள். ‘நாம வைக்கற பேரு நல்லாயிருக்கணும், பெரிசானா சம்பந்தப்பட்டவங்க நம்மளைத் திட்டக்கூடாது’ என்று எப்படியெல்லாம் யோசிக்கிறோம்!
நான் என் முதல் மகளுக்குப் பெயர் வைக்க மிகவும் யோசித்தேன். யாரிடமாவது ‘ஐடியா சொல்லுங்க’ என்று கேட்டால் ‘மொத லெட்டர் என்ன?’ என்று கடுப்பேற்றினார்கள். அப்போது நான் வைரமுத்துவின் புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டிருந்த நேரம். ‘சிகரங்களை நோக்கி’ படித்துக் கொண்டிருந்தேன். ‘ஓவியா’ என்ற அதில்வரும் கதாபாத்திரத்தில் ஈர்க்கப்பட்டு அந்தப் பெயரை வைக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
நண்பர் ஒருவரது கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் ‘மச்சான்’ என்றழைக்கும் எனது நண்பர் ஒருவர்தான் மீரா என்ற பெயரைச் சொல்ல.. உடனே மிகப் பிடித்துப்போய், சைக்கிளை அவசர அவசரமாக மிதித்து, நகராட்சி அலுவலகம்போய், அந்தப் பெயரை பர்த் சர்ட்டிஃபிகேட்டில் பதிவுசெய்து, பிறகுதான் உமாவிடமே அந்தப் பெயரைச் சொன்னேன்! இரண்டாவது மகளுக்குப் பெயர் வைக்கும்போது வழக்கமான எல்லாப் பெற்றோர்கள் போலவே (ரைமிங் முக்கியம்..!) மீராவுக்கு ரைமிங்காக மேகா என்று சட்டென்று வைத்துவிட்டோம்!
அதேபோல கதைகள் எழுத ஆரம்பித்தபோது என் சொந்தப் பெயரிலேதான் எழுதினேன். கவிதைக்கு வேறொரு புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது ‘சட்’டென்று அம்மா, அப்பா பெயர்களின் (அனந்தலட்சுமி-பாலசுப்ரமணியன்) முதல் பகுதிகளை இணைத்து ‘அனந்த்பாலா’ என்று வைத்துக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு மிகப் பிடித்த ஒரு பெயர்.
அதேபோல எழுத்தாளர் சுஜாதா (இன்றைக்கு அவரை நினைக்காமல் இருக்க முடியுமா!) கணையாழியின் கடைசி பக்கங்களில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் எழுதி, அவரே சுஜாதா என்ற பெயரின் ஸ்ரீரங்கம் எஸ்.ஆரை வம்புக்கிழுத்ததெல்லாம் படித்து, நாமளும் ரெண்டு மூணு புனைப்பெயர் வெச்சுகிட்டா என்ன’ என்று நினைத்து ஒரு சில கதைகளை ‘சத்ரியன்’ என்ற பெயரில் அனுப்பினேன்!
இதைவிடக் கூத்து என்னவென்றால்... விவேக்-ரூபலா, பரத்-சுசீலா, நரேன்-வைஜயந்தி, போல நாளைக்கு நாம ஃபேமஸ் எழுத்தாளராகும்போது நம்ம டிடக்டீவ்க்கு என்ன பேர் வைக்க என்று விட்டத்தைப் பார்த்து யோசித்து, யோசித்து அஷோக்ராஜா என்ற பெயரையும் வைத்து ஒரு நாவல் ஐந்தாறு அத்தியாயங்கள் எழுதினேன். நல்லவேளை தமிழர்கள் தப்பித்தார்கள்!
வலைப்பதிவு ஆரம்பித்தபோது, இந்தக் குழப்பமெல்லாம் இருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கும். (நானெல்லாம் எப்படி வலைப்பதிவு ஆரம்பிச்சேன்னு இல்ல!) அதாவது ப்ளாக்கரின் உள்ளே புகுந்து அது பெயர் கேட்டபோது, அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் இந்த பரிசல்காரன் என்ற பெயரை நானாக செலக்ட் செய்து அடித்துவிட்டேன். (இந்தப் பெயர்க்காரணம் கேட்பவர்களுக்கு.. இதோ இந்தப் பதிவில் பதிலிருக்கிறது!) மிகவும் யோசித்து செய்யும் எதையும் விடவும், டக்கென்று வந்துவிழுகிற சில, நல்லவண்ணம் க்ளிக் ஆகும் என்பதற்கு இந்தப் பெயரே உதாரணம்.
சென்றவாரம் கிழக்கு பதிப்பக முதன்மை உதவி ஆசிரியர்களில் ஒருவரும், பதிவருமான ச.நா.கண்ணன் திருமணத்துக்குப் போக முடிவெடுத்து காலை ஆறரை மணிக்கு நண்பர் வெயிலானின் அலுவலக வாசலில் பைக்கை நிறுத்த.. அங்கிருந்த வாட்ச்மேன் பெரியவர் “யாருங்க நீங்க?” என்றார். “இல்லீங்க வெயிலான் சாருக்காக வெய்ட் பண்றேன்” எனக்கூற அவருக்குப் புரியவில்லை. எனக்கு அவசரத்தில் வெயிலானின் நிஜப்பெயரே ஞாபகத்துக்கு வரவில்லை. யோசித்து ‘உங்க மேனேஜர் ரமேஷ்’ என்றபோதும் அவர் யோசனையாகவே தலையசைத்தார். பிறகு வெயிலானிடம் இதுபற்றிச் சொன்னபோது ‘ஸ்ரீகாந்த்னு சொன்னாத்தான் தெரியும்” என்றார்.
திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் பொருளாளரான ஈரவெங்காயம் சாமிநாதன் பெயரை எனது அலைபேசியில் ஈரவெங்காயம் என்று சேமித்து வைத்திருந்து, அவர் அழைப்பு வரும்போதெல்லாம் ஒரு புன்னகையோடுதான் எடுக்கிறேன். (ஈரவெங்காயம் காலிங்...) நேற்று சந்தித்தபோது தன் வலைப்பெயரை மாற்றப் போவதாகச் சொன்னார். மாற்றாதீர்கள்.. நாங்கள் உங்கள் பெயரைச் சுருக்கி.. ஈ.வெ.சா (ஈர வெங்காயம் சாமிநாதன்!) என்று கூப்பிடுக் கொண்டிருக்கிறோம்.. அது நல்லாயிருக்கு!
வடகரை வேலன் அண்ணாச்சியை அழைத்து ‘வேலனா.. நாங்க ஐ.சி.ஐ.சி.ஐ-லேர்ந்து பேசறோம்’ என்று நாமக்கல் சிபி கலாய்த்தபோது அவர் சொன்னாராம்.. ‘என்னை வேலன்னு பதிவர்களைத் தவிர யாரும் கூப்பிடமாட்டாங்க.. ஏன்னா என் பேரு ராஜேந்திரன்’ என்றாராம். (அடுத்ததாக கலாய்க்கறவங்க நோட் பண்ணிக்கங்கப்பா!) அதைவிடவும் நாங்களெல்லாம் ‘அண்ணாச்சி... அண்ணாச்சி’ என்றழைப்பதில்தான் அவர் இன்னும் மகிழ்ந்திருக்கக் கூடும். அவரது ஜிமெயில் ப்ரொஃபைலில் அவரே மாற்றிவிட்டாரே... அண்ணாச்சி என்று!
ஈரோட்டுத் தொழிலதிபர் நந்து... ‘நிலா ஃபாதர்தானே நீங்க’ என்று பலரும் கேட்கும்போதெல்லாம் எத்தனை அகமகிழ்வார் என்பதை ஒரு மகளின் தந்தையாய் என்னாலும் உணரமுடிகிறது.
நான் மிகவும் மதிக்கும் பதிவர்களில் ஒருவரான எழுத்தாளர் பைத்தியக்காரனை அழைத்து நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தேன்.. ‘எப்படி இப்படியொரு பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்க நினைத்தேன். அல்லது ‘எப்படி எல்லாருக்கும் பொதுவானவொரு பெயரை நீங்கள் மட்டும் வைக்கலாம்’ என்றும் கேட்டிருக்கவேண்டும்! அவர் என்னோடு நெருங்கிய நண்பராய்ப் பேசிக் கொண்டிருந்ததில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கவே நேரம் சரியாய் இருந்தது. ‘நான் சாதாரணமானவன்தாங்க பரிசல்.. நேர்ல பார்த்தா தோள்ல கைபோட்டு பேசுவேன்’ என்றார். என் தோளில் விழுவது உங்கள் கைக்கு சாதாரணமாக இருக்கலாம். என் தோளுக்கு எவ்வளவு பெரிய விஷயமது!
ச.நா.கண்ணன் திருமணத்தில் எழுத்தாளர்கள் பா.ராகவன், மருதன், முத்துக்குமார் ஆகியோரைச் சந்தித்து கிருஷ்ணகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அடுத்ததாக ‘பரிசல்காரன்’ என்று சொன்னபோது ‘ஓ! அது நீங்கதானா’ என்று அவர்கள் சொன்னபோதும், குலுக்கிய கையை இன்னும் அழுத்தமாய்ப் பிடித்தபோதும் மிக மகிழ்வாய் இருந்தது.
பெயரில் என்னவோ இருக்கிறது!