
ஒரு படத்தின் முதல் நாளிலேயே இத்தனை பேர் மனைவி, குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வருவதை வெகுநாட்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன். ஹாட்ஸ் ஆஃப் டு தமிழ்ப்படம் டீம்!
இந்தப்படத்தின் பெயர் தமிழ்படம் என்றிருந்த. ‘ப்’இல்லாமலிருப்பது தமிழ்ப்படங்களை ஒரு வித நக்கல் செய்யும் பாணி என நினைத்தேன்.கடைசியாக ப் சேர்த்திருக்கிறார்கள்.. ஏனென்று தெரியவில்லை.
தியேட்டருக்குள் போகும்போதே பலர் ‘விளம்பரங்களைப் பார்த்தே வயிறு வலி வந்திடுச்சு. முழுப்படமும் எப்படி கலாய்ச்சிருப்பாங்கன்னு பார்க்கலாம்’ என்ற ஆவல் மேலீட்டோடு பேசிக் கொண்டே வந்ததைக் கேட்க முடிந்தது.
அவர்களின் ஆவலுக்கு சரியான தீனி போட்டிருக்கிறார்கள்!

கதை.?
தமிழ்ப்படங்களின் கதை என்ன? அதுதான் தமிழ்ப்படத்தின் கதையும்.
சினிமாபட்டி என்ற ஊரில் ஆண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்ல வேண்டுமென்பது நாட்டாமை தீர்ப்பு. (ஏன்..? படம் பாருங்கள்!) அதிலிருந்து பாட்டியால் தப்பித்து சென்னைக்கு வரும் ஹீரோ, சின்ன வயதில் மார்க்கெட்டில் மாமூல் வாங்கும் ஒரு கும்பலின் அக்கிரமத்தைப் பார்க்கிறான். அவனால் தாங்கமுடியவில்லை. உடனேயே பெரியவனாகி (உடனேயா.. எப்படி? படத்தைப் பாருங்கள்!) போய் அந்த அக்கிரமக்காரர்களை அடித்து நொறுக்குகிறான். அதுவரை அவர்கள் அதே மார்க்கெட்டில், அதே டிரஸ்ஸுடன் லூட்டி அடித்தபடி இருக்கிறார்கள்!
ஹீரோ ஆயாச்சா? உடனே ஓபனிங் சாங், ஹீரோயின், லவ், அப்பா எதிர்ப்பு, முகம் தெரியா வில்லன், பழிவாங்கல், ஃப்ளாஷ் பேக், ஹீரோ அப்பாவைத்தேடி கிராமம் புகல், குடும்பப்பாட்டு, ஃபேமலி ஒன்று சேர்தல், வில்லன் கைது, கோர்ட்டில் வழக்கு, நீதிபதி தீர்ப்பு.. இத்யாதி.. இத்யாதி...
யப்பா சாமி! இப்படி படம் முழுக்க சிரிச்சு கைதட்டி ஒருத்தன் பார்க்க முடியுமா! பார்க்க வைத்திருக்கிறார்கள். சீன்களைச் சொல்வதினால் ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை. நீங்கள் எதிர்பார்ப்பதுதான் நடக்கிறது.. ஆனால் அதை அவர்கள் காட்டியிருக்கும் விதம்... ..
எத்தனை சீன்களைச் சொல்லலாம்!
ஹீரோ சென்னைக்கு வந்ததைக் காட்ட - எழும்பூர் ரயில் நிலையத்தைக் காட்டுகிறார்கள். அப்போது கேமரா முன் ஒரு ஆட்டோக்காரர் வந்து வசவுகிறார் பாருங்கள்.. சான்ஸே இல்லை. இனி டைரக்டர்கள் அந்த இடத்தில் கேமரா வைப்பார்களா என்பது சந்தேகமே!
பச்சை மஞ்ச பாட்டின்போது ஒரு கீழே போடுகிறார்கள்: ‘இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் சிவா’ இரண்டு செகண்டில் அதன் கீழேயே வேறொரு வரி வருகிறது.. போய்ப் படத்தில் பாருங்கள்.
நாயகியின் அப்பா, நாயகி மீது வைத்திருக்கும் அன்பைக் காட்ட - நாயகியின் புகைப்படத்தைக் கோணலாக மாட்டிய வேலைக்காரிக்கு ஒரு தண்டனை கொடுக்கிறார். என்ன தண்டனை என்பதையும் அதற்கு அந்த வேலைக்காரி காட்டும் எக்ஸ்ப்ரெஷனையும்... ப.பா!
அதே அப்பா, காபி கொண்டு வரும் வேலைக்காரனைத் திட்டி கோப்பையைத் தட்டி விடுகிறார். ‘கேட்டா அடுத்த நிமிஷம் வரணும்டா’ என்று. இந்த சீன் எதற்கு என்று பார்த்தால்---
பின்னொரு நாள் அவரிடம் ஹீரோ சவால் விடும்போது ‘ஒரு காபி கொண்டு வா’ என்கிறார். வெளியே போகும் ஹீரோ ஒரு குட்டிப் பாட்டுக்குப் பின் பணக்காரனாகி இவர் வீட்டுக்கு வருகிறான். அந்த ஹீரோ வரும்போது, அப்பாவுக்கு காபி வருகிறது! கைகுடுங்க டைரக்டர் சார்!
ஹீரோ பணக்காரனானால் என்னென்ன அவன் பேரில் வரும்? ஸ்கூல், காலேஜ், இண்டஸ்ட்ரீஸ்? ம்ஹூம்... இதில்.. ப.பா!
காவல்துறை ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துகிறது. அங்கே டீ கொண்டு வருபவர்... ம்ம்ம்ம்.. அஸ்கு புஸ்கு.. படத்தை பாருங்க! அதேபோல அந்த மீட்டிங்கிலேயே ஒரு கருப்பு ஆடு இருப்பதை ஹீரோ கண்டுபிடித்து தோலுரிப்பதும் அருமை!
க்ளைமாக்ஸில் ஹீரோ மருத்துவமனையில் இருக்கிறார், ஹீரோயின் வில்லனால் சுடப்படுகிறார்.. ஹீரோ வந்து காப்பாற்றுவாரில்லையா? அப்படித்தான் இதிலும். ஆனால் அவர் வருவதற்கு நடுநடுவே ஒன்றைக் காட்டுகிறார்கள் பாருங்கள்...
ஹீரோவின் வீடு - அட்டகாசம்.
அப்பாவைத் தேடிப்போகும் ஹீரோவின் குடும்பப்பாடலாய் ஒரு பாடலைப் போடுகிறார்கள். தியேட்டர் அடங்க மறுக்கிறது. அவ்வளவு க்ளாப்ஸ்!
ஹீரோ ஒவ்வொருவரையும் கொல்ல போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் படு சுவாரஸ்யம்!
கஸ்தூரி - இவ்வளவு செக்ஸியாய் ஸ்லிம்மாய்.. ஒரு பாடலுடன் போகிறாரே என ஏங்க வைக்கிறார். ஓ மகஸீயா, பச்ச, குத்துவிளக்கு, ஒரு சூறாவளி எந்தப் பாடலும் தியேட்டரில் சொதப்பவில்லை. ஓ மகஸீயாவில் டாலாக்கு டோல் டப்பிமா வரிக்கு சிவாவின் எக்ஸ்ப்ரஷனுக்கு தியேட்டர் குலுங்குகிறது.
அதேபோல அந்த டூயட் முடிந்தபின், தோளில் பையுடன் வீட்டுக்கு வரும் சிவாவை ‘எங்கடா ரெண்டு நாளா ஆளைக் காணோம்’ என்று பாட்டி கேட்க, ‘ஒரு டூயட்டுக்கு கொழும்பு போயிருந்தேன் பாட்டி’ என்கிறார் பாருங்கள்.. அசத்தல்!

சிவாவைத்தவிர வேறு யாருமே இந்த கேரக்டருக்குப் பொருந்துவார்களா என்பது சந்தேகமே. ஹீரோக்களின் அலட்டலை தன் அலட்டாத நடிப்பில் காண்பித்து பின்னி எடுத்துவிட்டார். என்ன.. சில சீன்களில் ரொம்பவும் லோ வாய்ஸில் பேசுகிறாரா... தியேட்டர் சிரிப்பொலியில் ஒன்றுமே கேட்பதில்லை.
ஒவ்வொரு சீனிலும் இது எந்தப்படத்திற்கான கிண்டல் என்று சுவாரஸ்யமாக தியேட்டரில் பார்வையாளர்கள் பேசிக் கொள்வதிலிருந்தே படத்தின் வெற்றி கணிக்கப்பட்டுவிட்டது.
வசனம். கே. சந்துரு. (சொல்லியே ஆகணும். எனக்கு பின்னூட்டமெல்லாம் போட்டிருக்காரு இந்த மனுஷன்!) சூப்பர்! (இது பின்னூட்டம் போட்டதால இல்ல என்பதைப் படம் பார்த்து தெரிந்து கொள்வீர்கள்!) எல்லாமே டைமிங் காமெடி வசனங்கள்தானே என்றில்லாமல் மிகுந்த சிரத்தையோடு எழுதியிருக்கிறார். குறிப்பாக கிராமம் பற்றி சண்முகசுந்தரம் பேசும் வசனங்கள்.
இந்த ஹீரோ என்ற வகைதொகையில்லாமல் எல்லாரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருந்தாலும் எதுவுமே புண்படும்வகையில் இல்லாமலிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
தட்டித் தட்டி கையும், சிரித்துச் சிரித்து வயிறும் வலித்தபடியேதான் வரவேண்டியிருக்கிறது. உள்ளே போகும்போதும் வரும்போதும் இவ்வளவு உற்சாக முகங்களைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது.
தமிழ்ப்படம் நல்லால்ல என்று இனி யாரும் சொல்ல முடியாது!
தமிழ்ப்படம் - சரவெடி சிரிவெடி!
.